Posted by
வனம்
சனி, 13 மே, 2017
கற்கள் விழுமென்று
பழுத்த மரமாய் பயந்திருந்தேன்
உன்னிடமிருந்து மட்டும் வருகின்றது
சினேகப்பார்வை - பிறகென்ன
உனக்காகவே பழுக்கின்றேன்
சுடும் சொல்லை வீசியெறிந்து
என்ன செஞ்சிடப் போகிறாய்,
பூக்களை எறிந்து பாரேன்,
முன்னைவிட இன்னும்
பிரியமாய் இருப்பேன்
எப்படி எப்படியோ
இருக்கின்றோம்,
மூர்கமாய் முஷ்டி
மடக்கிக் கொண்டும்,
குழைவாய் தோற்சாய்ந்து கொண்டும்;
- எல்லாமே அன்புடன்தான்
Posted by
வனம்
செவ்வாய், 17 நவம்பர், 2009
நான் வளர்ந்தது சென்னை, இப்போது ஒரு வருடமாக இருப்பது பெங்களூரு (சிலர் பெண்களூர்-னு எல்லாம் சொல்லுராங்க அதப்பத்தி எனக்கு தெரியாது)
பெங்களூரிலும் சரி சென்னையிலும் சரி நமக்கு அதிகம் தொடர்பு இருக்கின்றது இந்த (சிட்டி பஸ் சர்வீஸ்) மாநகர பெருந்துகள்தான்.
பொதுவாகவே எனக்கு இந்த ஒப்புநோக்கும் பழக்கம் நமக்கு அதிகம் எதையும் ஏன் இப்படி இருக்கு, எப்படி இந்த விடயங்கள் நடக்குது (நாங்கள் எல்லாம் சாக்ரடீஸின் மாணவராக்கும்) என்று யோசித்துக்கொண்டு இருப்பேன்.
இதில் எனக்கு பெங்களூரில் மிகவும் பிடித்தது அங்கு இருக்கும் இந்த "BMTC" -னு அழைக்கப்படும் பெங்களூர் மாநகர போக்குவரத்து கழகம் (Bangalore Metropolitan Transport Corporation). இவர்களின் அனுகுமுறை ரோம்ப நல்லா இருக்கு. முதலில் இவ்வளவு கூட்ட நெரிசல் இருக்கும் போதும் அந்த வாசல் கதவுகள். அதனால் இந்த படியில் தொங்கிக்கொண்டு பயணித்தல் (foot board travel சென்னையில் இந்த படியில் போவதில் நிறைய அரசியல் வைத்திருக்கின்றார்கள்) என்பது இல்லை மற்றும் பாதுகாப்பான பயணம்
எனக்கு தெரிந்து பெங்களூரில் பேருந்தில் இருந்து விழுந்து இறந்த சம்பவங்கள் இல்லை ஆனா பெங்களுர் பெருந்து ஓட்டுநர்கள் இயக்கும்விதம் தனி சாலையில் இருக்கும் மற்றவர்களுக்கு இவர்தான் சென்னை தண்ணீர் லாரி போன்றவர்கள் இங்க இருக்கின்றவர்கள் சைக்கிள் கேப்புல ஆட்டோ ஓட்டுரவங்க இல்ல பஸ் ஓட்டுரவங்க.பார்முலா 1 பந்தையங்களில் கூட இங்கு செல்வதுபோல் நெருக்கமாகவும் என்னை நீ முந்திவிடுவாயா என இரு பேருந்துகளுக்கு இடையில் போட்டியும் இருக்காது.
பேருந்து வகைகள் என பார்த்தால்
௧. நீலம் மற்றும் வெள்ளை நிறம் - இவை சாதாரண பெருந்து வகையில் வரும்
௨. சுவர்ணா பேருந்து வெள்ளி நிறத்தில் இருக்கும் - இவையும் சாதாரண பெருந்துதான் ஆனால் முதல் வகையை காட்டிலும் கொஞ்சம் கட்டணம் அதிகம்
௩.புஸ்பக் (Pushpak) பேருந்து - இதில் ஒற்றை கதவு மட்டும் இருக்கும் நடத்துனர் இருப்பதில்லை ஒட்டுநரே பயணச்சீட்டையும் கொடுத்துவிடுவார் பயண அட்டை (Bus Pass) வைத்திருப்பவர்களுக்கு இவை உகந்தது.
௪. வஜ்ரா (Vajra) பெருந்து - இவை குளிர்சாதன பேருந்து
௬.வாயு வஜ்ரா (Vayu Vajra) - இவை விமான நிலையத்திற்கு என்றே இயக்கப்பபவை கட்டணம் 50 லிருந்து 150 வரை
௭. இப்போது பிக் தடம் ("big route" ) என்று அறிமுகப்படுத்தி இருக்கின்றார்கள் இவற்றில் கட்டணம் கொஞ்சம் அதிகம் அவை
௮. Big 10 - இவை புரநகர் பகுதிகளை இணைக்கின்றது
௯.Big circle - இவை புற வழிச்சாலைகளை இணைப்பவை.
சென்னையைவிட சிறிய நகரமான பெங்களூரில் அதிகமான பொது பேருந்துகள் இயக்கப்படுகின்றன மேலும் இங்கு பேருந்தில் கூட்ட நெரிசல் குறைவு.
இதைவிட இன்னும் ஒரு மிக முக்கியமான விடயம் இருக்கின்றது. நம் சென்னை போக்குவரத்து துறை அதிகாரிகள் தவறவிட்ட ஒரு விடயம் பற்றி அடுத்த பதிவில்
(பதிவு ரோம்ம்ம்ம்ம்ம்ப பெரிதாக இருப்பதாக தோன்றியதால் )
உசாத்துணை : wikipedia
<--<<நெஞ்சுக்குள் நெருப்புடன் இருப்பதே ......... வாழ்வு>>-->
Posted by
வனம்
வியாழன், 12 நவம்பர், 2009
என் ரோம்பநாள் ஆசை வண்ணதாசன் பற்றி எழுதவேண்டும் என்பது.
இயற்பெயர் : கல்யாணசுந்தரம்.
கதைகளுக்கு : வண்ணதாசன்.
கவிதைகளுக்கு : கல்யாண்ஜி
வலைப்பூ : http://kalyaanji.blogspot.com (இது இப்போது இயங்கவில்லை)
விக்கி சுட்டி : http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D

இவர் 80-களில் எழுதத் தொடங்கி இன்றும் எழுதிக்கொண்டு இருக்கும் ஒரு இளம் (என்னைப்பொருத்தவரையில்) படைப்பாளி.
இவரின் கதைகளும், கவிதைகளும் எப்போதும் அதிகபட்ச அன்பையே அடிநாதமாக கொண்டிருக்கும். ஒரு மிகச்சிறிய சம்பவத்தை வைத்துக்கொண்டு அதை மிக அழகாக படிப்பவரின் உள்ளத்தில் ஒரு மென்மையையும், அன்பையும் நிலைநிறுத்துவதில் இவருக்கு நிகர் எனக்கு தெரிந்து வேறு யாறுமில்லை. இவரின் கதைகளும் சரி கவிதைகளும் சரி இரண்டுமே நம்மைச்சுற்றி அன்பானவர்கள் தவிர வேறு யாறும் இல்லை எனும் நிணைப்பை நமக்குள் விதைக்கும்.
இவரின் கடிதத்தொகுப்பான "எல்லோருக்கும் அன்புடம்" - ம் இவரின் கவிதை போலவே மிக அன்பானதாய் இருக்கும். இவர் தன் ஒவ்வொரு கடிதத்தையும் முடிக்கும் வாக்கியமான எல்லோருக்கும் அன்புடன் என்பதே இவரின் ஆளுமையை எல்லோருக்கும் சொல்லும்படியாக இருக்கும்.
இவரின் கதைகள் எனக்கு அறிமுகமானது எனது பதின்ம வயதுகளில் "புளிப்பு கனிகள்" இவர் 80 -ன் தொடக்கத்தில் எழுதிய இந்த கதையை படித்தது 94-ல் தினமனி நாளிதழின் ஞாயிற்று கிழமைகளில் வரும் தினமனி கதிர் -ல். இந்த கதையை படித்த பிறகுதான் நான் இது போன்ற புத்தகங்களில் வரும் எனக்கு பிடித்த கதை, கவிதை, துணுக்குகளை சேகரிக்கும் பைத்தியம் பிடித்தது.
இந்த கதையில் ஒரு அழகிய கிராமத்து பெண்னின் வாழ்வை வேறொரு ஆணின் பார்வையில் சொல்லியிருப்பார். இன்னும் என்னால் அந்த மண் வீதியில் உருண்டு ஓடும் போகன்வில்லா பூவை மறக்க முடிவதில்லை - இப்போது இந்த கதை இருந்த பக்கங்கள் என்னிடம் இல்லை.
இவரின் இன்னுமொரு கதை "அப்பாவை கொன்றவன்" ஒரு குடும்பத்தலைவனை கொன்றவனின் மனம் என்னவாகும் என விவரித்து இருப்பார் கொலையானவனின் பெண்னை எல்லோரும் அவள் தாயின் பெயரை குறிப்பிட்டு அழைக்கும்போது அவர் மட்டும் அந்த பெண்னை அவளின் தகப்பனின் பெயர் கொண்டு அழைக்கும் அந்த ஒற்றை வார்த்தை தரும் உணர்வுகளே அந்த முழு கதையும்
இவரின் வரிகள் நம்மை ஒரு இயல்பான மாய உலகத்திற்கு இட்டுச்செல்லும்.
"காற்றின் அனுமதி" ஒரு மிக இயல்பான கதை ஒரு காலையில் தன் குழந்தையை நடக்க அழைத்துச்செல்லும் ஒரு தந்தைக்கும், மகளுக்குமான உரையாடல்கள்தான் கதையே
"மரங்கொத்திகளுக்கு மரங்கள் இருக்கிறபடியும், மீன் கொத்திகளுக்கு மீன்கள் , இருக்கும்படியான நியதியை இயற்கை இன்னும் அனுசரித்துதான் வருகின்றது"
மேலும் "நடுகை, தனுமை, பாபசஞ்சர் ரயிலும் ஆண்கள் பெட்டியும்" இப்படி நிறைய.........
அவறைப்பற்றி எழுத்த தொடங்கினால் நீண்டுவிடுகின்றது.
மற்றொருமுறை அவரின் கவிதைகளுடன் பார்ப்போம்.
Posted by
வனம்
திங்கள், 9 நவம்பர், 2009
தசாப்தங்கள் பழகியபின்
கலந்து வாழ்வதாய்
நாமெடுத்த முடிவை
என்னுடன் கலக்காமலே நீ
முறித்துச் சென்றபின்

நான்......
பங்கேற்காத போரில்
தோற்றுவிட்ட அரசன்
விழும் வேகத்தில்
உயிராய் பற்றிய கயிறு
சிலந்தி நூலாய் போனவன்
வனாந்திரங்களில் ஏகாந்தமாய்
கூவித்திரிய வேண்டிய
குயிலின் நெறிந்த குரல்வலை
சிரிப்பற்று போன
முகத்தின் விலாசமானவன்.
Posted by
வனம்
திங்கள், 24 ஆகஸ்ட், 2009
நானும் நண்பரொருவரும் உணவகத்திற்கு சென்றிருந்தோம் அங்கு எனக்கு குஷ்பு இட்லி சொன்னேன். நண்பர் சிரித்தார், ஏன் என்றதற்கு
ஆமா இதுக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா ? -- நண்பர்
குஷ்புமாதிரி இருக்கின்றதால் -- நான்
குஷ்புமாதிரி என்ன ?
ம்ம்ம்ம்...........
என்னப்பா பதிலக்கானும் ?
என்னத்த சொல்ல............. வைரமுத்துவின் வார்த்தையில் சொல்லனும்னா கழுத்துக்கு கீழ் கவிதைகள் இரண்டுனு சொல்லலாம்.
ஆமா ஒரு சாப்பிடும் பொருளுக்கு எதை உவமையாக வைத்து பெயரிடுகின்றீர்கள் ?
இது சரி என நிணைக்கின்றீர்களா ?
மனிதர் விடமாட்டார் கேள்வினு வந்தால் வரிசையாக கேட்டுகிட்டே இருப்பார், என்ன கடைசியில் ஏதேனும் விடயம் இருக்கும்
அதனால் சரணடைந்து விடுவதே உத்தமம்.
சரி சொல்லுங்க எனக்கு அந்த இட்டலி பிடித்திருக்கின்றது (அய்யொ.... கண்டிப்பா அந்த பேருக்காக இல்ல. -- ஆமா இப்பவே சொல்லிட்டேன்.)
இல்லை உணவையும், காமத்தையும் சம்மந்தப்படுத்துரிங்களே அதான் கேட்டேன் -- நண்பர்
..............................எல்லாம் ஒரு கிளுகிளுப்புத்தான்
காமத்தை வாழத்தெரியாமல், குதறிவைக்கின்றீர்களே.
...........................................
தற்போதைய இந்திய காமம் ஒரு அதி உணர்சியாக குறிக்கப்படுகின்றது.
நம்முடைய திரைப்படங்களில் காட்டப்படுவது என்ன ?
ஒரு சராசரி தமிழரின் காமம் சார்ந்த உரையாடல்கள் எப்படி இருக்கின்றன ?
( அடங்கொய்யா மறுபடியும் அரம்பிச்சுட்டான்யா இரயில் மாதிரி கேள்வி கேக்க .... முடியலயே அதான் முதலிலே சரண் ஆயிடம்ல, சொல்ல வந்தத சொல்லுயா -- என்ன பண்னுரது மனசுக்குள்ளத்தான் கேக்கமுடியும் )
ஒரு அதியுச்ச அவசரத்தில் தன் தேவையை தீர்த்துக்கொள்ளும் வகையில்தான் இருக்கின்றது.
ஒரு துப்பட்டா போடாத பெண்ணைப்பார்த்ததும் காமுறும் மனதுள்ளவர்களாகவே நாம் கட்டுறுத்தப்படுகின்றோம்.
நான் அவளை அடையனும்டா.... எனும் வகையான சொல்பிறையோகங்கள்தான் இருக்கின்றன
காதல் காட்சிகளில்கூட நீ எனக்கு வேனும் எனதான் கேட்கப்படுகின்றது.
அதான் சொல்கின்றேன் காமத்தோடு நமக்கு வாழத்தெரியவில்லை, காமம் என்பதை அனுபவித்தல் எனும் பாவணையில்தான் பார்கின்றொம்.
காமத்தில் கரையவேண்டும், காமத்தில் திளைக்கனும், காமத்தில் வெறியேரக்கூடாது.
அவர்பாட்டுக்கு சொல்லிவிட்டு போய்விட்டார்
ம்ம்ம்ம்
ஆமாம், நாம் பொதுவாக அன்பின் வழி காமவயப்படுவது இல்லை. வாத்சாயனார், திருவள்ளுவர், ஆண்டாள்னு அழகா பதிந்துவிட்டு போயிருக்காங்க
ஒரு தவம்போல்
காமத்தில், காதலில் திழைத்திருக்கும்
வழியரியாமல் மீன்
கொத்தும் கொக்குகளாய் இருக்கின்றொம்
அதென்ன 15+ வயதுடையவர்கள் மட்டும் உனக்கென தனியாக தரம் இருக்கின்றதா என கேட்பது தெரிகின்றது.
ஏதோ என்னால முடிஞ்சது 15 வயதிலேயே நம்ம பிள்ளைகள் இதைப்பற்றி யோசிக்க தொடங்கிவிடுகின்றனர் அதான்.
Posted by
வனம்
வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009
Posted by
வனம்
வெள்ளி, 17 ஜூலை, 2009
மின்சாரம் அற்றுப்போன இரவு
எதுவும் சரியாய் தெரியாமல்
தட்டித்தடவிதான் செய்யவேண்டியிருக்கின்றது
''இப்படியே இருந்துவிட்டால்...''
எண்ணமே பயம்கொள்ள வைக்கிறது,
காற்றுகூட வராமல் புழுக்கத்தில்
வேலையே ஓடமாட்டேங்கிறது
என்றாலும் ;

பூதமாய் நம் நிழல்கள் விரிய
லாந்தர் விளக்கொளியில்
இங்குமங்கும்
அலைந்து கொண்டிருப்பதும்
நன்றாய்தான் இருக்கிறது
Posted by
வனம்
சனி, 11 ஜூலை, 2009

உனக்கென்ன கிழே இறக்கும்வரை
உடல் வருத்தம்
பார்த்த எனக்கோ
நாளெல்லாம் மன வருத்தம்
பாவம் பிள்ளையென்று.
Posted by
வனம்
புதன், 17 ஜூன், 2009
நானும் நண்பரும் எங்கள் மேளாலருடன் (அவர் ஒரு ஜெர்மனியர்) அன்றைய பணிமுடிந்து அறைக்கு திரும்பிக்கொண்டிருந்தோம்.
வரும் வழியில் ஒரு ஹம்மர்(HUMMER) மகிழுந்து எங்களை கடந்து சென்றது, இனி அவர்களின் உரையாடல்.....
மேளாலர் - வண்டியை பார்த்தாயா
நண்பர் - ம்ம்ம் ....... நல்ல வண்டி
எனக்கு இந்த வண்டியை பிடிக்காது
..........................
அதிக வேகம் செல்லாது, நகரத்திற்குள் என்றால் நன்றாக இருக்கும், ஆனால் நெடுஞ்சாலைகளில் வேகம் இருக்காது, மேலும் எரிபொருள் தேவை அதிகம்.
...........................ம்
எனக்கு அயுடி(AUDI) வண்டி பிடிக்கும் அதிகபட்ச வேகம் 250 கி.மீ
...........................
நண்பர் அறைக்கு திரும்பியவுடன் கூறினார்
என்ன தல ஹம்மர் பிடிக்காதுன்றான் என்ன! வண்டி அது.
அவர் விருப்பம் அது
என்ன மாதிரியான வண்டி அது !
அமெரிக்க இராணுவம் அவர்களுக்காக உருவாக்கிய வண்டி
இருக்கலாம் ஆனா அதற்கு அவர் கூறிய காரணங்களும் சரியானதுதானே ?
இருந்தாலும் எப்படிப்பட்ட வண்டி அது !
நம்ம ஊரில் எல்லாம் அதை வாங்கமுடியாம இருக்கின்றனர் என்னால ஒப்புக்கொள்ள முடியாது
முயலுக்கு மூன்று கால்கள் என
தன்கருத்தில் நின்றுகொண்டு
உள்வரும் விமர்சனங்களை
புறங்கையால் விளக்கி விடுகின்றனர்.
Posted by
வனம்
சனி, 16 மே, 2009
என்னதான் வருடத்திற்கு
பன்ணன்டு வந்தாலும்
சித்திரா பவுர்ணமி மழைச்சாரல்தான்;
தோல் பொசுக்கும் வெயில் மறைந்து
மென்மையாக காற்றடிக்க
வானம் பார்த்தும்,
மொத்தமாய் சலசலத்துக் கொண்டும்,
ஒருவர் கையால் நிலாச்சோறு உண்டும்;
நிலவு, நட்சத்திரங்களாய் சேர்ந்திருப்போம்
-அதுவே சந்தோஷம்தானே.
Posted by
வனம்
புதன், 6 மே, 2009

வானமே எல்லையாய் குறுக்கீடற்று
அருளிய எங்கள் தெருமுனை
பிள்ளையார்,
ஐந்தடிக்குள் சிறைபட்டுப்போனார்
பகைவரிடமிருந்து காக்கும்
கவசம் தரித்த பிறகு.
Posted by
வனம்
திங்கள், 27 ஏப்ரல், 2009
நண்பர் பதின்மரக்கிளை எழுதிய
தவறிய நாணயமும் சிதறிய நாகரீகமும். பதிவை படித்தபிறகு எனக்குள் எழுந்தவை
முதலில் அவரின் இந்த பதிவின் பல கருத்தாக்கங்களை நானும் ஏற்றுக்கொள்கின்றேன்
நம் சுயத்தை இயல்பை பன்பை அத்தனையும் தொலைத்து விட்டு எந்த நாகரீகத்தில் அம்மனமாக நிர்க்க போகிறோம்.
என்ற கேள்வி எனக்குள்ளும் இருக்கின்றது.
இந்த நாகரீகம் எங்கிருந்து வந்ததோ அங்கும் இப்படிதான் இருக்குமா? தெரியவில்லை. எனும் வரிகளின் வாயிலாக இந்த விடயங்கள் வேறு எங்கோ இருந்து வந்தது பொன்ற மாயை தோன்றுவதாக உணர்கின்றேன்
நாகரீகம் என்றும்; வழக்கம், பண்பாடு என்றும் நம் மண்டைக்குள் ஆணி அரைந்து யோசிக்கும், சிந்திக்கும் அறிவை குறைத்தது யார்?
இந்த முறைமைகள் வேறு எங்கிருந்தும் வரவில்லை, இங்கிருந்தே, நமக்குள்ளிருந்தே வந்தது.
அடுத்தவர் என்ன சொல்வார், என்ன நிணைப்பார் என இந்த இந்திய நாகரீகம் நமக்குள் திணித்தது எவ்வளவு?
சில நாட்களுக்கு முன் தினசரியில் வந்தது--
சென்னையில் குடி போதையில் மனைவி இல்லாதபோது தன் 20 வயது மகளையெ வன்புணர்ந்த தந்தை.
போதையில் இருக்கும் 40+ வயதுடைய ஒரு ஆணுடன் போராட முடியாத தைரியத்தை எந்த பண்பாடு கற்றுக்கொடுத்தது?
தன்னுடைய உடல் பசிக்கு தான் உரவுகொள்ளும் பெண்னின் சம்மதம் தேவையில்லை என நிணைக்கும் அந்த ஆண் இத்தனை காலம் தன் மனைவியோடு எப்படி இருந்திருப்பார்-- கணவனால் வன்புணரப்படும் கொடுமைகளை இத்தனை காலம் பொருத்துக் கொள்ளும் வழக்கம் வந்தது எங்கிருந்து?
எல்லாம் நமக்குள்ளிருந்து வந்ததுதான்.
உள்ளத்தில் ஒளியிருந்தால் எல்லாம் நன்றாய் நடக்கும்.
Posted by
வனம்
திங்கள், 20 ஏப்ரல், 2009
திடீரென படித்துக்கொண்டிருந்த புத்தகத்தின் எழுத்துக்கள் தெரியாமல் இருட்டு, சட சட வென சப்தம், உடல் புல்லரிக்க குளிர்ச்சி வந்து சூழ்ந்து கொண்டது
அள்ளிக்கோண்டு வருகின்றது மண்வாசனை
ஏதும் புரியாமல் சாளரம் திறந்து பார்த்தால்......

வெளியெங்கும் பரந்து பெய்துகொண்டிருந்தது மழை.
திரும்பி உள்பார்த்தால் குறுஞ்சிரிப்புடனும் கையில் டீ கோப்பையுடனும் ஐன்னல் திண்டில் அமர்ந்திருந்த என் கால் கட்டி உட்காருகின்றாய்
'' யாரடி சொல்லியது நாக்குசுடும் சூட்டுடன் டீ குடித்துக்கொண்டு மழை பார்க்க பிடிக்குமெனக்கு என்று....''
அதோ பாரேன் கிளைக்குள் ஒதுங்கும் குயிலொன்று,
எல்லாவற்றையும் கழுவிய மழை நம்முள்ளும் எதையோ கழுவிவிட்டது வெளி போலவே உள்ளும் குளிர்ச்சி,
நீட்டிய என் கைக்குள் கோர்த்துக்கொள்கின்றன உன் கைகள் உள்ளுக்குள் இறங்கிய குளிர்ச்சி கண்களில் தெரிய

மழை நமக்கு வரம் தரும்
அன்போடு இருக்க
இதமான குளிரிலும்
கடும் சூட்டிலும்
சேர்ந்து இருக்க
கோர்த்த கைகள்
பிரியாமல் இருக்க
Posted by
வனம்
வியாழன், 9 ஏப்ரல், 2009
எதிரியின் உடலறுப்பவை எல்லாம்
ஆயுதங்கள் அல்ல
வன்மையாய் கிழித்துக்கொண்டு
எதிர்பவரின் இரத்தம் குடிப்பவை எல்லாம்
ஆயுதங்கள் அல்ல
இதோ புதிய தலைமுறை
இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின்
ஆயுதங்கள்
முதல் ஆயுதம் கொடுத்தவன்
முத்துக்குமரன்....
தன் உயிரை உருக்கி
தான் கொண்ட கருத்தில்
வேகமேற்றி எதிர்பவர்களுக்கெதிராய்
விஸ்வரூபம் எடுத்து நின்றான்,
அடுத்து....
மென்மையாய் தன்
கால் காக்கும் காலணியை
ஆயுதமாக்கியவன்
அல் ஜடி
மென்மையை கொண்டு
வலியைத் தரும் ஆயுதம்.
இப்பொழுதெல்லாம் அதிகம்
இது தான் பயன்படுகின்றது
அடுத்தது வருகின்றது
பட்டால் உடைந்துவிடும் ஆயுதம்
சொல்லவா வேண்டும்,
ஆசிட் முட்டையை
அரசியல் அடித்தளமாக்கி வந்தவனை
அடித்தது
அழுகிய முட்டை.
ஆயுதம் செய்வதைவிட
ஆயுதம் பழகுவோம்
நம் எதிர்ப்பை திடமாய் காட்ட
Posted by
வனம்
வியாழன், 8 ஜனவரி, 2009
Posted by
வனம்
செவ்வாய், 2 டிசம்பர், 2008
இன்னும் இடுகையிட தொடங்கவில்லை,
தொடங்கியதும், தொடர்வேண் திடமாய்....
-- இராஜராஜன்
நன்றி தமிழ் பிரியன் -- கீழே உருளும் வரிகளுக்கு